dark_mode
Image
  • Saturday, 10 May 2025

அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்பு... உச்ச நீதிமன்ற தீர்ப்பும், மத்திய அரசின் கல்வி நிதியும்!

அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்பு... உச்ச நீதிமன்ற தீர்ப்பும், மத்திய அரசின் கல்வி நிதியும்!

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையொட்டி கடந்த 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் பலவும் ஏற்கவில்லை. ஆனால் புதிய கல்விக் கொள்கையின் அம்சமான மும்மொழி கொள்கையை ஏற்குமாறு வலியுறுத்தி கிடுக்குப்பிடி போட்டு வருகிறது.

மீண்டும் மொழிப் போர்

குறிப்பாக தமிழகத்தில் ஆளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மத்திய பாஜக அரசுடன் கொள்கை ரீதியாக முரண்டு பிடித்து வருகிறது. இது அரசியல் மோதலாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான், பள்ளிக் கல்வித்துறைக்கு எஞ்சிய நிதியை விடுவிப்போம் என்று கறார் காட்டியது. இது இரண்டு அரசுகளுக்கும் இடையில் மொழி போராக மாறியது.

 

உச்ச நீதிமன்ற வழக்கு

இந்த தீயானது கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பரவியது. இதற்கிடையில் மாநில அரசுகள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

தேசிய கல்விக் கொள்கை சர்ச்சை

அதில், தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு செயல்படுத்தாதது பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறு செயல் அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்பு

அதில், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழகம், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 போன்ற எந்தவொரு கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாநிலங்களை நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.

கல்வி நிதி வேண்டும்

உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் வழிநின்று வரவேற்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. எனவே, மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். நமது மாநிலத்திற்கான கல்வி நிதியை உடனே வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 

comment / reply_from

related_post