ஆவடி காவல் ஆணையரகம்: 6.5 டன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆவடி காவல் ஆணையரகத்துக்குச் சொந்தமான மதுவிலக்கு பிரிவு தனிப்படையினர், நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தலுக்கான முயற்சியை அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.
ரகசிய தகவலின் அடிப்படையில், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், KA 51 AK 8556 என்ற பதிவு எண்ணை கொண்ட கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர். சாக்கு மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுநர் விக்னேஷ் (27, திருப்பத்தூர்) மற்றும் அவரது உதவியாளர் குமார் (44, விழுப்புரம்) கைது செய்யப்பட்டனர். சுமார் 6.5 டன் எடையுள்ள, ரூ.10 லட்சம் மதிப்புடைய குட்கா பொருட்களும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் போது, இந்த பொருட்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும், இதன் உரிமையாளர் செந்தில் @ கனகலிங்கம் (38, ஐயப்பந்தாங்கல்) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தல், விநியோகம், மற்றும் விற்பனைக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய உறுதியாக உள்ளதாகவும் காவல் ஆணையாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வு சட்டத்தைக் கையில் எடுத்து குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட விளம்பர பொருட்களை கடத்தும் குற்றச்செயல்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகளின் முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.

