dark_mode
Image
  • Friday, 27 June 2025

கர்நாடக முதல்வரிடம் பாடம் கற்கணும்: ஸ்டாலினுக்கு அன்புமணி அட்வைஸ்

கர்நாடக முதல்வரிடம் பாடம் கற்கணும்: ஸ்டாலினுக்கு அன்புமணி அட்வைஸ்

திருவண்ணாமலை: ''சமூக நீதி குறித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், தமிழக முதல்வர் ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
 

திருவண்ணாமலையில் நேற்று நடந்த, பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த, 1989ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மீண்டும், இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் துவங்க உள்ளதாக கூறியவுடன், கருணாநிதி பயந்து, எம்.பி.சி., என உருவாக்கி, அத்துடன், 108 ஜாதிகளை இணைத்து விட்டார். அதனால்தான், உள் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி, 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை, தேர்தல் நேரத்தில் கொடுத்தார். இதுவே, ஒன்றரை மாதத்திற்கு முன் கொடுத்திருந்தால், பிரச்னை இருந்திருக்காது.

'கர்நாடகாவில், 2015ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது போதாது, மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போகிறோம் என, அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பின்தங்கிய சமுதாயம், அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்து கொடுக்கணும், இடஒதுக்கீடு கொடுக்கணும். நல்ல திட்டங்களை கொடுக்கணும்னா, கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே ஆகணும்' என அவர் கூறுகிறார். அவரிடம், நம் முதல்வர் சமூக நீதி குறித்து பாடம் கற்க வேண்டும்.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிஷா, பீஹார் முதல்வர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும்போது, தமிழக முதல்வருக்கு மட்டும் இல்லையா?

வரலாற்றில், அமைச்சர் வேலுவிற்கு ஒரு இடம் உண்டு. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வைத்தவர் என, இவரது பெயர் முதலில் இடம் பெற்றுள்ளது. நியாயமாக பார்த்தால், தி.மு.க.,வினர் பாதி பேர் குண்டர் சட்டத்தில் இருக்கணும்.

தி.மு.க.,வினர், வன்னியர்களையும், பட்டியலினத்தவரையும் சேர விடாமல் மோதவிட்டு வருகின்றனர். இதை அனைவரும் உணர்ந்து கொண்டு விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

related_post