dark_mode
Image
  • Saturday, 07 June 2025

செந்தில் பாலாஜி வழக்கு: சாட்சி விசாரணையை தொடரலாம்.. கிரீன் சிக்னல் காட்டிய சென்னை ஐகோர்ட்!

செந்தில் பாலாஜி வழக்கு: சாட்சி விசாரணையை தொடரலாம்.. கிரீன் சிக்னல் காட்டிய சென்னை ஐகோர்ட்!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சிகளிடம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணையை தொடரலாம் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28 க்கு ஒத்திவைத்தது.

 

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், சாட்சி விசாரணை துவங்கி விட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சாட்சி விசாரணையைத் தொடரலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் முதல் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளர் ஹரிஷ்குமாரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.

செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை சாட்சி கூண்டில் நின்றவாறு பதிலளித்தார் ஹரிஷ் குமார். அவர் அளித்த பதில்கள் சிலவற்றுக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் அசல் ஆவணங்கள் இல்லை என்றும், சில கூடுதல் ஆவணங்களை தற்போது புதிதாக தாக்கல் செய்து இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி வழக்கு: சாட்சி விசாரணையை தொடரலாம்.. கிரீன் சிக்னல் காட்டிய சென்னை ஐகோர்ட்!

related_post