ஞானசேகரன் வீடு | சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் வருவாய் துறை கொடுத்த அறிக்கை..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது இல்லம் இந்து சமய அறநிலைத்துறைக்குச் சொந்தமான கோவில் நிலத்தில் கட்டப்பட்டது என்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது
ஓரிரு தினங்களுக்கு முன் ஞானசேகரன் வீட்டை சிறப்பு புலனாய்வு குழு அமைப்பினர் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில், இரண்டு அட்டை பெட்டிகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வருவாய்துறை, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் மாநகராட்சிக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதில், ஞானசேகரன் வீடு அமைந்திருக்கும் இடம் யாருக்குச் சொந்தமானது என விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து ஞானசேகரன் இல்லம் அமைந்துள்ள மண்டபம் சாலை மற்றும் ஏரிக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் நேற்று முன் தினமும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கிண்டி வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய அந்த சோதனை பலமணி நேரம் நீண்டது. அங்குள்ள மண்டபம் மற்றும் வீடுகளை டேப் மூலம் அளந்த அதிகாரிகள், ஞானசேகரன் வீடு மட்டுமல்லாமல் அருகில் உள்ள அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், அந்த இடம் முழுவதும் திருவான்மியூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் நிலத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. பின்பு, கிண்டி தாசில்தார் மணிமேகலை தலைமையில் அதிகாரிகள் அந்த இடத்தினை அளவிட்டனர்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி திருவேங்கடம் மற்றும் கோவில் நிர்வாக அலுவலர் நாராயணி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று சோதனைகளை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் இந்த இடம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
ஏனெனில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் இந்து சமய அறநிலைத்துறைக்குச் சொந்தமான ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் நிலத்திலும், சில வீடுகள் மாநகராட்சி நிலத்தின் சில நூறு அடிகளை சேர்த்தும் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, SIT குழுவிடம் வருவாய் துறையினர் அறிக்கை சமர்பித்துள்ளனர். அதில், கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் உள்ள வீடு கோவில் நிலத்தில் உள்ளதால் அதை ஞானசேகரனின் சொத்தாக கருதமுடியாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டின் ஒரு பகுதி கோவில் நிலத்திலும், நுழைவு வாயில் போன்றவை மாநகராட்சி நிலத்திலும் இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ‘சிறப்பு புலனாய்வு குழு’ அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். -சைதை திவான்


comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description