dark_mode
Image
  • Wednesday, 14 May 2025

தமிழகத்தின் கடன் ரூ.15 லட்சம் கோடி இருக்கும்.. குண்டை தூக்கிப் போட்ட ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தின் கடன் ரூ.15 லட்சம் கோடி இருக்கும்.. குண்டை தூக்கிப் போட்ட ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பு ஏற்று நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டில் பயணித்து வருகிறது. தமிழகம் எந்த துறைகள், திட்டங்களில் முதலிடம் வகிக்கிறது என்றும், தமிழக அரசின் சாதனைகள் குறித்தும் செய்திக் குறிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், கடன் பெறுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தொடர்ந்து முதல் மாநிலமாக திமுக அரசு ஆக்கியிருப்பதாக ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்றும், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு திமுக அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது என்றும், இதுதான் திமுக அரசின் கடந்த நான்காண்டு கால சாதனை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வாக்குறுதிஅளித்திருந்தது என்ற ஓபிஎஸ், ஆனால், கடன் வாங்குவதை திமுக அரசு அதிகரித்துக் கொண்டே சென்றது என்றும் குற்றம்சாட்டிய அவர், “2021 ஆம் ஆண்டு 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாக இருந்தது தமிழ்நாடு அரசின் கடன் தொகை. திமுக ஆட்சி முடிவில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் பெற்ற கடன் தொகை மட்டும் 4 இலட்சத்து 44 ஆயிரத்து 457 கோடி ரூபாய் ஆகும் என்றும், இது தவிர மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், இதர பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்த்தால், கடன் தொகை 15 லட்சம் கோடி ரூபாய் அளவைத் தொடும் நிலையில் உள்ளது என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.
திமுக அரசின் தவறானப் பொருளாதாரக் கொள்கை, தவறான நிதி மேலாண்மை காரணமாக, நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும், திமுக அரசினால் மக்களுக்கு எந்தப் பயனும் சென்றடையவில்லை. மாறாக, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் கடனாளியாக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், “மக்களின் பணத்தை திமுக அரசு விரயமாக்கிக் கொண்டிருக்கிறது என்றும், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எனது கடும் கண்டனம். திமுக தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
 

comment / reply_from

related_post