dark_mode
Image
  • Sunday, 08 June 2025

'நெல் கொள்முதலில் ரூ.811 கோடி மோசடி': அன்புமணி

'நெல் கொள்முதலில் ரூ.811 கோடி மோசடி': அன்புமணி

சென்னை : 'நெல் கொள்முதலில், 811 கோடி ரூபாய் மோசடி குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்திஉள்ளார். 

அவரது அறிக்கை:

தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தில் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், விவசாயிகளிடம் இருந்து, 811 கோடி ரூபாய் மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்துள்ளது.

அதில் ஒரு பகுதியை, தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் வாயிலாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாரியத்திற்கு வழங்கியுள்ளது. இதற்காக, 210 கோடி ரூபாயை பெற்றுள்ளது. ஆனால், அந்தத் தொகை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

நெல் கொள்முதலில், தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு செய்த ஊழலுக்கும், அதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கும், தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

விவசாயிகளுக்கு பணத்தை வழங்காத கூட்டமைப்பின் மீது, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகளுக்கு துரோகம் செய்த மோசடி அமைப்பை, தமிழக அரசு பாதுகாப்பதற்கான காரணம் என்ன? அந்த அமைப்புக்கு நெல் கொள்முதல் உரிமை வழங்கப்படுவதற்கு மறைமுகமாக உதவிய சக்தி எது என்பது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

நெல் வழங்கிய விவசாயிகளுக்கு, அதற்கான தொகையை, தமிழக அரசே நேரடியாக வழங்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் விவசாயிகளிடமிருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மட்டும் தான் நெல் கொள்முதல் செய்யும் என்ற கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி, என் தலைமையில் அறப்போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
 

related_post