dark_mode
Image
  • Monday, 12 May 2025

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15% இட ஒதுக்கீடு: வலுக்கும் கோரிக்கை - தமிழக அரசு முடிவு என்ன?

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15% இட ஒதுக்கீடு: வலுக்கும் கோரிக்கை - தமிழக அரசு முடிவு என்ன?

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மாநில தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, பிள்ளைமார் மற்றும் முதலியார் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை. மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதை வலியுறுத்தினார்.

மதுரையில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமச்சந்திர குமார் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 
அப்போது ஓம் சக்தி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். "தமிழ்நாட்டில் முதலியார், பிள்ளைமார் சமுதாயத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் வெள்ளாளர் என்ற பிரிவின் கீழ் பல உட்பிரிவுகளாக தமிழ்நாடு முழுவதும் பரவி வாழ்கின்றனர். நாங்கள் கணக்கெடுத்ததில், மாநிலம் முழுவதும் 2 முதல் 2.5 கோடி மக்கள் தொகை உள்ளனர்" என்று கூறினார்.

மேலும், "தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 20%க்கும் அதிகமாக இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால், சரியான மக்கள் தொகை விவரம் தெரியவரும். தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் இருக்கிறார்கள். எனவே, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு சலுகைகளில் 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் மதுரை முத்து. அவருடைய சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இது வருகிற 31 ஆம் தேதி நடக்க இருக்கிறது. "அவருக்கு எங்கள் சமூகத்தின் சார்பில் பெரிய வரவேற்பு அளிக்க இருக்கிறோம். அவரிடமும் எங்களது கோரிக்கையை வலியுறுத்த இருக்கிறோம்" என்று ஓம் சக்தி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், செயல் தலைவர் பரிமளநாதன், மதுரை மாவட்ட துணைத் தலைவர்கள் பாக்கியநாதன், கர்னல் மணிவண்ணன், செயலாளர் கே. சண்முகசுந்தரம், இணைச் செயலாளர் குமாரவேல், துணைச் செயலாளர் ஆதவன், பொருளாளர் ஞானசேகரன், முன்னாள் மேயர் மதுரை முத்து சிலை கமிட்டி தலைவர் முத்து, செயலாளர் ஜெகன்நாதன், பொருளாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிள்ளைமார் மற்றும் முதலியார் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த கோரிக்கையை அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

comment / reply_from

related_post