dark_mode
Image
  • Saturday, 07 June 2025

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!
என்னுடைய படத்தை வெளியிட கன்னட அமைப்புகள் தடை செய்துள்ளன என்றும், இது சட்டவிரோதம் என்றும் கர்நாடக ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 
 தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கன்னட அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில், ஒரு சில கன்னட அமைப்புகள் பெங்களூர் உள்பட கர்நாடக முழுவதும் கமல்ஹாசனின் தக்லைப் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும், மீறி திரையிட்டால் தியேட்டர்கள் கொளுத்தப்படும் என்றும் பயமுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
 
இந்த நிலையில், கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தனது படத்தை திரையிட அரசு, போலீஸ் துறை மற்றும் திரைப்பட வர்த்தக சங்கம் தடுக்கிறது என்றும், படத்தை திரையிட்டால் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கத்தினர் கூறிய போது, "இது ஒரு சாதாரண விஷயம். கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு சொல்லிவிட்டால் இந்த பிரச்சனை முடிவடையும்" என்று கூறினர். ஆனால், "கமலஹாசன் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், சட்டம், நீதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
 

related_post