dark_mode
Image
  • Sunday, 15 June 2025

கமிஷன் தொகைக்கு அரசு துறைகள் ஆசை; தரமான 'டான்சி' தயாரிப்பை வாங்க மறுப்பு

கமிஷன் தொகைக்கு அரசு துறைகள் ஆசை; தரமான 'டான்சி' தயாரிப்பை வாங்க மறுப்பு

சென்னை: தரம் நிறைந்ததாக இருந்தும், 'டான்சி' நிறுவனத்தின் மேஜை, நாற்காலி போன்ற மரச் சாமானங்களை வாங்குவதில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அரசு துறைகள் அலட்சியம் காட்டுகின்றன.
 

தமிழக அரசின், 'டான்சி' எனப்படும் தமிழக சிறு தொழில் நிறுவனம், எக்கு, மரத்தால் செய்யப்பட்ட மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள், அலமாரி போன்றவற்றை தயாரித்து, அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விற்கிறது.

தனியார் நிறுவனங்களிடம் இருந்து தரமான மூலப்பொருட்களை வாங்கி, அதற்கு ஏற்ப பல்வேறு பொருட்களை தயாரிக்கிறது. அவை தரமாகவும், நீண்ட காலத்திற்கு உழைக்கும் உறுதி தன்மையுடனும் இருக்கின்றன.

தமிழக அரசின் ஒவ்வொரு துறையும், அவற்றின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களும், 'டெண்டர்' கோரி மேஜை, நாற்காலி, கணினி மேஜை, சோபா உள்ளிட்ட மரச்சாமான்களை கொள்முதல் செய்கின்றன. அவ்வாறு வாங்கும் போது, 'டான்சி' நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வாங்க, தமிழக அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது. அதை பின்பற்றி, தங்களுக்கு தேவையான மரச்சாமான்களை டான்சியிடம் இருந்து வாங்குவதற்கு பதில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கவே, அரசு துறைகள் முன்னுரிமை தருகின்றன. இதற்கு, தனியார் நிறுவனங்கள் வழங்கும் 'கமிஷன்' தொகையே முக்கிய காரணம்.

டான்சி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:


டான்சியின் கட்டில், மேஜை, பீரோவை ஒருவரால் அசைக்க கூட முடியாது. அந்தளவுக்கு தரமாகவும், உறுதியாகவும் உள்ளன. பள்ளி கல்வி, உயர் கல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட நான்கு - ஐந்து துறைகளில் இருந்து தான், ஆண்டுதோறும் தொடர்ந்து ஆர்டர்கள் வருகின்றன.

எளிதில் உடையாதபடி தரமான குப்பை தொட்டி தயாரித்து வழங்குகிறாம். ஒரு முறை வாங்கிய சென்னை மாநகராட்சி, அடுத்த முறை வாங்கவில்லை.

'டெண்டர்' இல்லாமல் நேரடியாக வாங்க சிறப்பு அனுமதி இருந்தும், அரசு துறைகள் வாங்குவதில்லை. தரம் இருப்பதால், விலையும் அதற்கு ஏற்ப தான் இருக்கும். கமிஷன் கிடைப்பதால், தரமற்ற பொருட்களை தனியாரிடம் இருந்து வாங்க ஆர்வம் காட்டுகின்றன.

எனவே, டான்சியிடம் இருந்து அரசு நிறுவனங்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதத்திற்கு பொருட்களை கட்டாயம் வாங்க, அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

related_post