டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள்; டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான மோதல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 370க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவ, தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள அமெரிக்க துணை தூதரக கட்டடம் ஈரான் தாக்குதலில் சேதம் அடைந்தது. இருநாடுகளின் ராணுவமும் அதிரடி தாக்குதல்களை இரவிலும் அரங்கேற்றி வருவதால் யுத்தம் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை.
இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தமது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
உடனடியாக டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள். நான் கையெழுத்திடச் சொன்ன அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் ஈரான் கையெழுத்திட்டு இருக்க வேண்டும்.
மனித உயிர்களை இழப்பது என்ன ஒரு அவமானம். மிகவும் இலகுவாக சொல்ல வேண்டுமானால் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது.
அதை தான் நான் மீண்டும், மீண்டும் சொன்னேன். அனைவரும் உடனடியாக டெஹ்ரானை விட்டு உடனடியரக வெளியேறுங்கள். இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.
டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய துருப்புகள் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து டிரம்ப் இப்படி கூறி இருக்கிறார். இதற்கு முன்னதாக இத்தகைய நடவடிக்கைகளில் டிரம்ப் ஈடுபடாமல் இருந்தார்.
குறிப்பாக டெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் தமது தாக்குதல்களை வேகப்படுத்தி இருக்கும் தருணத்தில் அவரின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.