மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் முடங்க மத்திய அரசின் பிடிவாதமே காரணம்-திருமாவளவன்

மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் எழுப்பிய ஒற்றைக்கோரிக்கை பெகசஸ் விவாதம் வேண்டும் என்பதே, ஆனால் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மாட்டோம் என்பதில் மத்திய அரசு பிடிவாதமாக இருந்தது, அதனால் தான் அவைகள் முடங்கின என கூறினார். ஆனால் எதிர்கட்சிகள் அவைகளை முடக்கினர் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுவது அபாண்டமானது என திருமாவளவன் விமர்சித்தார்.
பெகாசஸ் உளவு அறியும் மென்பொருள் தொடர்பாக சில மணி நேரம் ஒதுக்கி விவாதித்திருக்கலாம், ஆனால் அரசு அதற்கு தயாராகவில்லை, மத்திய அரசு உளவு பார்க்கவில்லை என்றால் அவர்கள் அவையில் விவாதித்திருக்கலாம் என குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் வந்த பிரதமரும், உள்துறை அமைச்சரும் கூட்டத்தொடர் முடியும் நாளிலேயே வந்துள்ளனர் என்றும் கூறினார். அவையை முடக்கியது அரசன் பிடிவாதம் தான் என்றும் அதற்கு எதிர்கட்சிகள் பொறுப்பாக முடியாது என்றும் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மக்களவை மற்றும் மாநிலங்களவையின் தலைவர்களின் நடவடிக்கைகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளார்கள் என்பதையே பிரதிபலிக்கிறது என்றும் ஆளும் அரசின் கைப்பாவையாக உள்ளார்கள் என்றும் திருமாவளவன் விமர்சித்தார்.
