விஜயபிரபாகரனுடன் விரைவில் சுற்றுப்பயணம்… பிரேமலதா அறிவிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரனுடன் இணைந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூன் 11) தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பிரேமலதா பேசும்போது, “உங்களுடைய பணியே 2026 தேர்தலுக்கான பணி தான். ஒவ்வொரும் இன்று முதலே தங்களுடைய பணிகளை தொடங்க வேண்டும்.
செயல்வீரர்களாக களத்திற்கு சென்று, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை முழுமையாக ஆராய்ந்து பூத் கமிட்டி நிர்வாகிகள் முதல் கிளை கழக நிர்வாகிகள் வரை அனைவரையும் நேரடியாக சென்று சந்திக்க வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “தமிழகம் முழுவதும் விரைவில் நானும் விஜயபிரபாகரனும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். மக்களையும் கிளைக்கழக தொண்டர்களையும் சந்திக்க இருக்கிறோம். அதனை தொடர்ந்து ஜனவரியில் மாநாடு நடைபெற உள்ளது” என்றார்.
தொடர்ந்து, அதிமுகவுடன் கூட்டணியில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு,
“அதிமுகவின் நிலைப்பாட்டை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதனை நாங்கள் வரவேற்கிறோம். தேமுதிகவின் நிலைப்பாட்டை நாங்கள் சிறிது காலத்திற்கு பிறகு சொல்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கிறது. அதுவரை எங்கள் கட்சியை நாங்கள் வளர்க்க வேண்டும்.
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்குவதாக எடப்பாடி பழனிசாமி தான் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தார். அரசியல் நாகரிகம் கருதி அந்த கடிதத்தை நாங்கள் காண்பிக்கவில்லை. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான போதே, ராஜ்யசபா சீட் கடிதத்தை காண்பித்துவிடலாம் என்று சொன்னேன். அதற்கு எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிந்தபிறகு அறிவிக்கலாம் என்று சொன்னார்.
ஆனால், செய்தியாளர் சந்திப்பின் போது நாங்கள் யாருக்கும் ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவில்லை என்று எடப்பாடி கூறினார். அவரது பேச்சு தேமுதிகவின் கடைக்கோடி தொண்டன் வரை ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
எடப்பாடி பழனிசாமி டென்ஷனில் இருந்ததால், செய்தியாளர் சந்திப்பில் இப்படி பேசிவிட்டார் என்று விளக்கம் கொடுத்தார்கள். தற்போது 2026 தேர்தலில் மீண்டும் ராஜ்யசபா சீட் தருவதாக சொல்கிறார்கள்” என்றார்.
செய்தியாளர் மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description