உண்மை வெல்லும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதானி ட்வீட்

அதானி விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க பிறப்பித்த உத்தரவை வரவேற்பதாகவும், உண்மை வெல்லும் என்றும் அதானி தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் மீது ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், முதலீட்டாளர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நெறிமுறை குழு தேவை என்பதை நீதிமன்றம் உணர்கிறது எனத் தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையில் குழு அமைப்பதாகவும், அந்த குழுவில் ஓ.பி.பட், நீதிபதி தேவ்தர், கே.வி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் உத்தரவிட்டது.
மேலும், தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருந்து பொதுமக்களது பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பதை விளக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் செபி அமைப்பு விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும், செபி அமைப்பு நடத்தும் விசாரணை தொடர்பான விவரங்களை இந்த நீதிமன்றத்திலும், அதேபோல நிபுணர் குழுவுக்கும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், நிபுணர் குழு அமைத்தாலும் அது இந்த முறைகேடு தொடர்பான செபியின் தனிப்பட்ட விசாரணையை பாதிக்காது. முறைகேடு புகார் தொடர்பாக செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்தி இரண்டு மாதத்தில் நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில், அதானி தனது ட்விட்டர் பக்கத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி முடிவு கிடைக்கும் என்றும், உண்மை வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description