ஜி.எஸ்.டி., வரி விகிதங்களில் மாற்றமா தெளிவுபடுத்த வணிகர்கள் கோரிக்கை

சென்னை: 'ஜி.எஸ்.டி., வரி விகிதங்களில் மாற்றம் வரப்போகிறது என, வெளியாகும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், துறை சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்ததில் இருந்து, 3 சதவீதம், 5, 12, 18, 28 சதவீதம் என, வரி விகிதங்கள் நடைமுறையில் உள்ளன. தீப்பெட்டிக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டது.
இதனால், அதை தயாரிக்கும் குறுந்தொழில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தொடர் கோரிக்கையை அடுத்து, தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதேபோல், பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டன. இதனால், தொழில்கள் பாதுகாக்கப்பட்டன.
தற்போது, ஜி.எஸ்.டி., வரி விகிதங்களில் இருந்து, 12 சதவீதத்தை எடுத்து விடுவதாகவும், 5 சதவீதம் மற்றும், 18 சதவீதம் மட்டுமே நிர்ணயிக்க இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.
இது வதந்தியா, வரி விதிப்பில் மாற்றம் செய்வதற்கான தகவலா என தெரியவில்லை. இதனால், வணிகர்கள், உற்பத்தியாளர்கள் இடையே அச்சம், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, தவறாக பரப்பப்படும் தகவலை நிறுத்த, தங்கள் துறை சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, வணிக வரித் துறை கூடுதல் ஆணையர் ஒருவர் கூறுகையில், 'இதுவரை ஜி.எஸ்.டி., வரி மாற்றம் தொடர்பாக, ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை, ஜி.எஸ்.டி., கவுன்சில் தான் முடிவு செய்கிறது. வணிகர்கள் இடையே ஏற்பட்டுள்ள குழப்பம், கவுன்சிலின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்' என்றார்.
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description