மதுரையில் இன்று விஜய் கட்சி மாநாடு: இரவோடு இரவாக இடம் பிடித்த தொண்டர்கள்!

மதுரை பாரபத்தியில் த.வெ.க., 2வது மாநில மாநாடு இன்று (ஆக.21) மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. மாநாட்டுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் தொண்டர்கள் இப்பொழுதே இடம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னையில் இருந்து நேற்று மாலை கார் மூலம் மதுரை வந்த விஜய் , மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகே ஓட்டலில் தங்கினார். முன்னதாக நேற்று காலை மதுரை வந்த அவரது பெற்றோர் ஷோபா, சந்திரசேகர் மாநாட்டு திடலை பார்வையிட்டனர். இன்று மதியம் 3:00 மணிக்கு முதல் நிகழ்வாக கட்சி கொடியேற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி எடுத்தல், கொள்கைப்பாடல் கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து விஜய் பேசுவதுடன் இரவு 7:00 மணிக்கு மாநாடு நிறைவு பெறுகிறது.
கொடிக்கம்பம் சரிந்தது மதுரை அருகே பாரபத்தியில், விஜயின் நண்பர் ஒருவரின் 500 ஏக்கர் காலியிடத்தில் மாநாடு பந்தல் அமைக்கும் பணி ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கப்பட்டது. ஆனால் கொடிக்கம்பம் அமைப்பதற்காக தரைத்தள கான்கிரீட் மேடையை இரண்டு நாட்களுக்கு முன் தான் அமைத்தனர். அது முழுமையாக காய்ந்திராத நிலையில் மேடையின் மீது இரும்பு வால்வுகள், ஸ்குரூக்கள் மூலம் நுாறடி உயர இரும்புக்கம்பம் பொருத்தப்பட்டது.
ஸ்குரூக்களை பொருத்திக் கொண்டிருந்த போதே, கான்கிரீட் தளத்தில் இருந்து எடை தாங்காமல் கம்பம் சரிய ஆரம்பித்தது. கம்பத்தில் இருந்து நுாறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரம் நிர்வாகி ஒருவரின் காரின் மீது கம்பத்தின் முன் பகுதி விழுந்தது. இதில் காரின் மேற்புறம் இரண்டாக பிளந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து தற்காலிகமாக மாநாட்டு திடலின் வேறொரு பகுதியில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
3500 போலீசார்
2500 பவுன்சர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட உள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) மாநாட்டு திடலுக்குள் கண்காணிக்க வரவழைக்கப்பட்டுள்ளனர். பெண்களை கண்காணிப்பதற்கென 500 பெண் பவுன்சர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டு அரங்கிற்குள் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமரும் இருபுறத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 600 டாக்டர்கள் தயாராக உள்ளனர். 45 மினி, பெரிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன
மதியம் 3:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என்றாலும் ஒரு மணிக்கே தொண்டர்கள் அமர வைக்கப்பட்டு விடுவர். நிழல் கூட இல்லாத கட்டாந்தரையில் தான் அமருவதற்கான பிளாஸ்டிக் சேர்கள் வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி முடியும் இரவு 7:00 மணிக்கு பின்பே வெளியேற முடியும் என்பதால் பிஸ்கெட், அரைலிட்டர் குடிநீர் பாட்டில், மிக்சர், குளுக்கோஸ் டப்பா என இரண்டு லட்சம் பைகள் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
இப்போதே தொண்டர்கள் ramp வாக் செய்யும் மேடை அருகே திரண்டு உள்ளனர். முதல் நாள் இரவே வந்து இடம் பிடித்து படுத்துள்ளனர்.
வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் மயக்கம் அடைந்தால் கார்டியோ, விபத்தில் சிக்கினால் ஆர்த்தோ சிறப்பு நிபுணர்களைக் கொண்ட முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேர்களுக்கு தடையா மாநாட்டில் 5 லட்சம் பேர் அமருவதற்கான பிளாஸ்டிக் சேர்களை, ஐந்து ஒப்பந்ததாரர்கள் மூலம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசியல் அழுத்தம் காரணமாக நான்கு ஒப்பந்ததாரர்கள் சேர்களை தருவதற்கு திடீரென கடைசி நேரத்தில் மறுப்பு தெரிவித்தனர். ஒரு ஒப்பந்ததாரரிடம் இருந்து மட்டும் இரண்டு லட்சம் சேர்கள் மட்டும் இறக்கப்பட்டன. இதையடுத்து அவசரமாக கேரள மாநிலத்தில் இருந்து வேறு நிறுவனங்கள் மூலம் சேர்கள் வரவழைக்கப்பட்டன.
திருஷ்டி கழித்து புறப்பட்டார் விஜய்
மாநாட்டில் பங்கேற்பதற்காக, நேற்று காலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து, தன் காரில் விஜய் புறப்பட்டார். அதற்கு முன், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காருக்கு பூசணிக்காய், எலுமிச்சை பழம் சுற்றி, திருஷ்டி கழிக்கப்பட்டது.