மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு முறை விரைவில் துவக்கம்! மஹா., தேர்தல் சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட முயற்சி

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆறு மாதங்களுக்கும் மேலான நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் சேமிப்பு தகவல்களை சரிபார்க்கக் கோரி, தோல்வி அடைந்த, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி வேட்பாளர்கள் தாக்கல் செய்த, 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை, விரைவில் பரிசீலிக்க இந்திய தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, மஹாராஷ்டிரா தேர்தல் முடிவு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என, கூறப்படுகிறது.
மஹாராஷ்டிராவில், 2024 நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 288 தொகுதிகளில், பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி, 232 தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைத்தது.
பா.ஜ., 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவானதை அடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் ஆனார். ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்களாகினர்.
முறைகேடு
காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி, 50க்கும் குறைவான இடங்களையே கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தேர்தலில் தோல்வி அடைந்த அல்லது இரண்டாம் இடம் பிடித்த மஹா விகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளர்கள், தொகுதிக்குட்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் சோதனை மற்றும் சரிபார்ப்பு முறையை மேற்கொள்ளக் கோரி, தேர்தல் கமிஷனில், 104 விண்ணப்பங்களை தாக்கல் செய்தனர்.
ஏறத்தாழ, 95 தொகுதிகளில், 755 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்கக் கோரி இந்த விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக, சரத் பவார் கட்சியினர் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
விதிகளின்படி, தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதிகளை தவிர்த்து, மற்ற தொகுதிகளில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் மின்னணு ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு செயல்முறை முடிக்கப்பட வேண்டும்.
2024 லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைவெளியிட்டது.
அதன்படி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும், 'பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்' ஆகிய நிறுவனங்களின் இன்ஜினியர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட வேட்பாளர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் அல்லது 'விவிபாட்' எனப்படும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரத்தை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்மொழிவு
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிப்., 11ல் விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு செயல்முறை என்பது, ஓட்டுப்பதிவு தரவை அழித்து மீண்டும் ஏற்றுவது என சிக்கலாக இருக்கக்கூடாது' என குறிப்பிட்டது.
மே 9ல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வேட்பாளர்களால் சரிபார்ப்பு கோரப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் தரவுகள் நீக்கப்படாது என்ற தேர்தல் கமிஷனின் முன்மொழிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அதே சமயம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் சேமிப்பு தகவல்கள், மென்பொருள் சேதப்படுத்தப்படவில்லை என, அதன் தயாரிப்பு நிறுவனங்களின் இன்ஜினியர்கள் சான்றளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் யோசனை கூறியது.
விளக்கம்
இந்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு செயல்முறையை அடுத்த சில வாரங்களில் துவங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி, சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நீடிக்கும் மஹாராஷ்டிராவில், இந்த செயல்முறை விரைவில் துவங்கப்பட உள்ளது.
இது, மஹா விகாஸ் அகாடி கூட்டணியின் சந்தேகங்களை தீர்க்கும் என, கூறப்படுகிறது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பான எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு இந்த செயல்முறை உரிய விளக்கத்தை அளிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description