கொலை முயற்சி வழக்கில் முன் ஜாமின் வழங்கிய நீதிபதி: நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முன் ஜாமின் வழங்கியது குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபாலா. இவர், சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில், கடந்த மாதம் அளித்த புகாரில், 'எங்களுக்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தில், ச.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவர் அறிவழகி, அவரது கணவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடு கட்ட முயற்சித்தனர்.
'அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஜூன், 24ம் தேதி இரவு வீட்டுக்குள் நுழைந்து, என்னையும், என் கணவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமிபாலா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் ஆஜராகி, ''தாக்குதலில் காயமடைந்த மனுதாரர், மருத்துவமனையில் இருந்து, ஜூலை, 3ல் 'டிஸ்சார்ஜ்' ஆனதாக, அரசு தரப்பு கூறியதால், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உள்ளது.
ஆனால், புகார்தாரர் லட்சுமி பாலா, ஜூலை, 9ல் தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்,'' என்றார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, நேரில் ஆஜரான குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குனர், 'வழக்கின் விசாரணை அதிகாரி அளித்த தகவலின்படியே, புகார்தாரர் ஜூலை 3ல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் விசாரணை நீதிமன்றத்தில் கூறினார்' என்றார்.
இதையடுத்து நீதிபதி, 'இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, முன் ஜாமின் வழங்கியது குறித்து, ஜூலை 28ம் தேதி ஆவணங்களுடன் ஆஜராகி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.