dark_mode
Image
  • Thursday, 21 August 2025

சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மைப்பணியாளர்கள் நள்ளிரவில் கைது!

சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மைப்பணியாளர்கள் நள்ளிரவில் கைது!

சென்னையில் 13 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை நேற்றிரவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை காவல்துறையினர் மேற்கொண்டு உள்ளனர்.

சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 தூய்மைப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடைபாதை சாலையில் அமர்ந்து போராடுவது ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இதனையடுத்து அந்தப் பகுதியிலிருந்து தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தக் காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. அதனையடுத்து சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் கே.என் .நேரு மற்றும் அமைச்சர் சேகர்பாபு சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆகியோர் தூய்மைப் பணியாளர் குழு உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை .

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா ,’’சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு என்று சில இடங்கள் உள்ளது. காவல் துறையினரின் அனுமதி பெற்று அந்த இடத்தில் போராட்டத்தை மேற்கொள்ளலாம். ஆனால் மாநகராட்சி போராட்டத்தை நடத்துவதற்கான இடம் இல்லை. அந்த வகையில் தான் தீர்ப்பு இன்றைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தூய்மையாளர்கள் கலைத்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே பணியாற்றி இருந்த தூய்மை பணியாளர்கள் தனியாருடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு என்றைக்கும் இருக்கும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு இந்த நிறுவனத்தின் மூலம் பி.எஃப்,ஹெல்த் இன்சூரன்ஸ், அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, போனஸ், பண்டிகை காலங்களில் சிறப்பு பரிசுகள் என பல்வேறு வகைகளில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் ஒரு சிலது தான் கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது முழுமையாக கொடுக்கப்படும். எனவே தூய்மை பணியாளர்கள் நம்பிக்கையுடன் பணிக்கு திரும்பலாம்.தனியாரிடம் ஒப்படைத்தாலும் அதனுடைய மாநகராட்சியிடம் தான் இருக்கும். பேச்சுவார்த்தை தோல்வி என்று குறிப்பிட முடியாது..இதைக் குறித்து இன்னொரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது அதன் தீர்ப்பு அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

 

இருப்பினும் தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தப்படும் இடத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ரயிலில் பயணம் செய்பவர்கள், பேருந்துக்காக காத்திருந்தவர்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடத்தில் நீங்கள் போராட்டத்தை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முன்னேற்றபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கைது நடவடிக்கைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்

related_post