திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸை சந்தித்தது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசியுடன் தான் என்றும், அவருக்கு தெரியாமல் இந்தச் சந்திப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை வெறுப்பேற்றி, அவருக்கு ஒரு 'செக்' வைக்கும் நோக்கில் நடந்திருக்கலாம் என்றும் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
"திருமாவளவன், நாம் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு கூட்டணியில் இருக்க வேண்டும், அல்லது கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பதை மறைமுகமாக கூறுவதுதான் இந்தச் சந்திப்பின் நோக்கம்" என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி கொண்டிருப்பதாகவும், இதுவரை அவர் தி.மு.க.வை ஆதரித்துதான் பேட்டி கொடுத்து வருகிறார் என்றும் மணி சுட்டிக்காட்டியுள்ளார். அவரது அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியில் இருக்க வாய்ப்பில்லை என்பதால், ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு வந்தால், விடுதலை சிறுத்தைகள் கண்டிப்பாக கூட்டணியை விட்டு வெளியேறும் என்றும், அது அ.தி.மு.க. அல்லது நடிகர் விஜய்யின் கட்சி கூட்டணிக்குத்தான் செல்லும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.