DMK alliance: “அதிக தொகுதிகளை கேட்போம்!” உடைத்து பேசிய திருமாவளவன்! சிபிஎம்-ஐ தொடர்ந்து.. விசிகவும் விடாப்பிடி!

சென்னை: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், திமுகவிடமிருந்து அதிக தொகுதிகளை கேட்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியிருந்தார். இது தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இதே நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அதிக தொகுதிகளை கேட்போம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, 'சிபிஎம் கூடுதல் தொகுதிகளை கேட்கிறதே, விசிகவும் கேட்குமா?' என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
அரசியல் கட்சிகள் அப்படித்தானே யோசிக்க முடியும்? குறைவான தொகுதிகளை கேட்போம் என்று சொல்ல முடியாது. எனவே, நாங்களும் இதைத்தான் சொல்கிறோம். கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள், அதாவது அது திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக கூட்டணியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முயற்சிப்பது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால், பேச்சுவார்த்தையின்போது இருக்கிற சூழலை,மனம் விட்டு பேசி, அதன் அடிப்படையில் இறுதி முடிவை எடுப்போம். எங்களின் தேவைகளை, கூட்டணி தலைவர் என்கிற முறையில், அவர்கள் உருவாக்கக்கூடிய குழுவிடம்தான் பேசுவோம். அவர்களுக்கும் எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டிய, இடம் கொடுக்க வேண்டிய தேவை இக்கிறது. கூடுதலான இடங்களில் போட்டியிட்டு தனிப்பட்ட முறையில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் விருப்பத்தில் அவர்களும் இருப்பார்கள்.
எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு, கருத்தில் கொண்டு நாங்கள் ஆலோசித்து முடிவு எடுப்போம். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை 100 விழுக்காடு நிறைவேற வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு. எங்களுடைய எதிர்பார்ப்பும் கூட. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த பதிலை தொடர்ந்து, திமுக கூட்டணிக்கு சவாலாக அதிமுக கூட்டணி அமையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் பதிலளித்த அவர், "இதுவரை எந்த சவாலும் ஏற்படும் சூழல் கனியவில்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணி இன்னும் ஒரு வடிவமே பெறவில்லை. அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக கருதவேண்டியதில்லை. யதார்த்தமான உண்மை. அதற்குதான், அமித்ஷா ஒரு முறைக்கு இருமுறை இங்கு வந்தார். கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்று சொன்னார்
பாஜக எதிர்பார்த்ததற்கு மாறாக ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளே அந்த கூட்டணியில் இணைவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. குறிப்பாக, தேமுதிக பாமக ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை. எனவே, அதிமுக பாஜகவை தவிர என்னென்ன கட்சிகள் அந்த கூட்டணியில் உள்ளன என்பதில் நம்மால் முடிவுக்கு வர முடியவில்லை. இந்த சூழலில் அதிமுக - பாஜக ஆட்சியை கைப்பற்றும். கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லுவது ஒரு வகையான பில்டப் என்று சொல்ல வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக கூடுதல் தொகுதி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடைத்து பேசியிருந்தது. கடந்த முறை பாஜக தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட கூடாது என்பதற்காக கூட்டணியில் இருந்தோம். இந்த முறையும் இதே நோக்கத்தோடு கூட்டணி தொடர்கிறது. ஆனால், அதற்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துவிட முடியாது என்று பெ. சண்முகம் பேசியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது திருமாவளவனும், கூடுதல் தொகுதிகள் குறித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தல்களில் பாஜக கூட்டணி எப்படி பலமாக வளர்ந்து வந்தது என்பதை திமுக அறியும். அதேபோல, கூட்டணி கட்சிகளின் பலம் என்ன என்பதையும் 2016 தேர்தல் திமுகவுக்கு உணர்த்தியிருந்தது. இப்படி இருக்கையில், கூட்டணி கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமா? என்று கேள்விகள் எழுந்திக்கின்றன.
செய்தியாளர் மயிலை மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description