இன்று முதல் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம், சின்னக்கல்லாரில் 9 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ., கோவை மாவட்டம் சின்கோனா, சோலையார், நீலகிரி மாவட்டம் பார்சன் பள்ளத்தாக்கு பகுதிகளில் தலா 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, மேல்பவானியில் தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவை தவிர, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28ம் தேதி வரை, சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது