சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே… இனிமே ஃப்ரீ இல்ல- வாகன ஓட்டிகளுக்கு ரூ.225 டோல் கட்டணம்!

பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலையில் இனிமேல் இலவசமாக பயணிக்க முடியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் டோல் கட்டணம் வசூலிக்க NHAI திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் எக்ஸ்பிரஸ்வே சாலை மூன்று மாநிலங்கள் வழியாக பயணிப்பது பலரும் அறிந்த விஷயம். இதில் கர்நாடகா மாநிலத்திற்குள் (76 கி.மீ) மட்டும் பணிகள் முடிந்து அதிவிரைவு சாலையை மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தமிழ்நாடு (94 கி.மீ), ஆந்திரா (91 கி.மீ) மாநிலங்களில் பணிகள் நடந்து வருகின்றன. முழுமையாக முடிவடைய இன்னும் ஓராண்டு ஆகும் எனத் தெரிகிறது. தற்போது கர்நாடகா மாநிலத்திற்குள் ஓஸ்கோடே முதல் கோலார் தங்க வயல் வரையிலான பகுதியில் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
நாள்தோறும் சுமார் 2,500 வாகனங்கள் வரை இயக்கப்படுகின்றன. கர்நாடகா பகுதிக்குள் வரும் எக்ஸ்பிரஸ்வே சாலைக்குள் அதிவேகமாக பயணித்த வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டன. இதில் சிலர் பலியானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷா, ட்ராக்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தான் விதிகளை மீறி பயணித்து விபத்துகளை ஏற்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இது பொதுமக்கள் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. இதனால் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி கார்கள் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வேகக் கட்டுப்பாட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை வாகனங்களின் வேகத்தை கண்டறிந்து டோல் முடியும் பகுதியில் ரசீது வழங்கி எச்சரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இலவசமாக வாகனங்கள் பயணித்து வந்த நிலையில், இனிமேல் டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளில் NHAI எனப்படும் தேசிய நெடுஞ்சாலைத் துறை செய்து வருகிறது.
கார்கள் ஒரு வழிப் பாணமான சென்றால் 150 ரூபாய், இருவழிப் பயணத்திற்கு 225 ரூபாய். மேலும் மாலூர், பங்காருபேட்டை, பெத்தமங்கலா ஆகிய பகுதிகளில் இண்டர்சேஞ்ச் சாலைகள் அமைந்துள்ளன. இங்கு 55 முதல் 150 ரூபாய் வரை டோல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் வாகன ஓட்டிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுசரி, எப்போது முதல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற கேள்வி எழலாம்.
இதுபற்றி NHAI மண்டல அதிகாரி விலாஸ் பிரமங்கர் கூறுகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையில் டோல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான சில நடைமுறைகள் முடிவடைய காத்திருக்கிறோம். அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து அறிவிக்கும். இதையடுத்து டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக பிற நெடுஞ்சாலைகள் உடன் இணைக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன. உதாரணமாக பெங்களூரு – கோலர் நெடுஞ்சாலை உடன் பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா மாநில அரசுக்கு NHAI சார்பில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 18 கிலோமீட்டர் தூரத்திற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இது முடிவடைந்ததும் பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே டோல் கட்டண வருவாயும் அதிகமாக கிடைக்கும்.