அணு ஆயுத திட்டத்தை ஈரான் மீண்டும் துவக்கினால் தாக்குவோம்: அதிபர் டிரம்ப்

அணு ஆயுத திட்டத்தை மீண்டும் துவக்கினால் ஈரானை தாக்குவோம். அந்த தாக்குதல் தற்போது நடந்ததைவிட மோசமானதாக இருக்கும்,' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறினார்.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்க விமானப்படைகள் குண்டு வீசி அழித்தன. அதன்பின், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் த ஹேக்கில் நடக்கும், 'நேட்டோ' எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் மாநாட்டில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் எல்லாம் முழுதுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு அங்கிருந்து எதையும் எடுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தளவுக்கு அமெரிக்க படைகள் வேகமாக செயல்பட்டன.
ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முடிந்துவிட்டது. அவர்கள் அதை மீண்டும் உருவாக்க முயற்சித்தால், நாங்கள் மீண்டும் தாக்குவோம், அது இன்னும் மோசமாக இருக்கும். வெறுமனே போர் நிறுத்தம் வேண்டாம்; உண்மையான முடிவு வேண்டும்.
அதற்கு ஈரான் அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும். அடுத்த சில நாட்களில் இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமெரிக்க ராணுவ உளவு அமைப்பு நடத்திய முதற்கட்ட ஆய்வில், 'அமெரிக்காவின் தாக்குதல் குறைந்தபட்ச சேதத்தையே ஈரானின் அணு ஆயுதத் திட்டத்திற்கு ஏற்படுத்தியது. அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தாக்குதலுக்கு முன் ஈரான் இடமாற்றியிருக்கலாம்' என, தெரியவந்துள்ளது.
திட்டியது ஏன்?
இஸ்ரேலும் ஈரானும் பள்ளி வளாகத்தில் கட்டிப்புரண்டு அடித்துக்கொள்ளும் குழந்தைகள் போல சண்டையிட்டனர். அதனால் அவர்களை வழிக்குக் கொண்டுவர கடுமையாகப் பேச வேண்டியிருந்தது. அவ்வப்போது அப்படி பேச வேண்டும்.
-டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர்