போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லை: அதிபர் டிரம்ப் அறிவிப்பை ஏற்க மறுக்கும் ஈரான்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், ''இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும்.
24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும்'' என அதிபர் டிரம்ப் அறிவித்தார். போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
இது குறித்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி கூறியதாவது: இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாகவோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது.
போர் நிறுத்தம் குறித்து இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை. தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்த தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமருடன் அதிபர் டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் நாட்டின் தலைவர்களுடன் கத்தார் நாட்டின் தலைவர்கள் நேரடியாக பேசி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்திக் கொள்வோம் என்று இஸ்ரேல் பிரதமரும், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்திக் கொள்வோம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சரும் உறுதி அளித்துள்ளனர்.
எனினும் இரு நாட்டினரும் இது பற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் போர் நிறுத்தம் அமலுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.