உதயநிதி பாணியில் செங்கலை கையிலெடுத்து இன்று பீகாரிலும் மக்கள் போராட்டம்.!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என ஒரு செங்கலை எடுத்து காட்டி நடத்திய ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உதயநிதி பாணியில் பீகார் மாநிலத்தில் உள்ள தர்பாங் என்ற பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க செங்கல் ஏந்தி அந்த பகுதி மக்கள் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எய்ம்ஸ் மருத்துவமனையை தர்பங்காவில் அமைக்கலாம் என அறிவிப்பு வெளியானது. பீகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னரே எய்ம்ஸ் மருத்துவமனையை தர்பங்காவில் அமைப்பதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. இந்த நிகழ்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்ததோடு சரி, ஒரு செங்கல்லையும் நகர்த்தவில்லை. இந்த மருத்துவமனை கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிப்பதால் சுற்றுச் சுவர் கட்டும் பணியும் நின்று போனது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி தற்போது இல்லை. மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதி இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. செங்கல்லுடன் உதயநிதி பிரச்சாரம் செய்ததோடு நிற்கவில்லை. திமுக ஆட்சி அமைந்த பிறகு அந்த செங்கல்லை திமுக தலைவரும் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு பரிசாகவும் அவர் கொடுத்தார். இப்படியாக உதயநிதி அன்று போட்ட பிள்ளையார் சுழியால் இன்று பீகாரிலும் செங்கல்லுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மக்கள் போராடி வருகிறார்கள்.
