dark_mode
Image
  • Saturday, 10 May 2025

நாட்டிற்கு பெருமை சேர்த்தார்: சோபியா குரேஷி பெற்றோர் பெருமிதம்

நாட்டிற்கு பெருமை சேர்த்தார்: சோபியா குரேஷி பெற்றோர் பெருமிதம்

ஆமதாபாத்: '' பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய ராணுவ கமாண்டர் சோபியா குரேஷி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்,'' என அவரது பெற்றோர், சகோதரி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா, நேற்று இரவு தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைகள் ஈடுபட்டன. இந்த தாக்குதல்நடத்திய குழுக்களில் நமது நாட்டு பெண் வீராங்கனைகளும் ஈடுபடுத்தப்பட்டனர். இதை உறுதிபடுத்தும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராணுவ அமைச்சகம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 2 பெண் அதிகாரிகள் முக்கிய பங்கு வகித்தனர். ராணுவ கர்னல்பியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆவார்கள்.

இவர்களை பற்றிய தகவல் வெளியானதும், நமது நாட்டு மக்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க துவங்கினர். சமூக வலைதளங்களில் இரண்டு பெண் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், சோபியா குரேஷியின் வீரதீர செயலுக்கு அவரின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவரது தந்தை, தாத்தா ஆகியோரும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.

இது தொடர்பாக அவரது தந்தை தாஜ் முகமது குரேஷி கூறியதாவது:எங்களது மகளை நினைத்து பெருமை கொள்கிறோம். நாட்டிற்காக சிறந்த விஷயத்தை எங்களது மகள் செய்துள்ளார். பாகிஸ்தான் அழிக்கப்பட வேண்டும். எனது தாத்தா, தந்தையும் ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர். தற்போது அவரும் பணியாற்றுகிறார்.

தாயார் ஹலிமா குரேஷிநமது தாய்மார்களின் குங்குமத்தை அழித்தவர்களை பழிவாங்கிவிட்டோம். தனது தாத்தா, தந்தையின் பாதையை பின்பற்றவே சோபியா விரும்பினார். அவர்களும் ராணுவத்தில் தான் பணியாற்றினார். சோபியாவும் குழந்தையாக இருந்தது முதல் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேரப் போவதாகவே கூறுவார்.

சகோதரி ஷைனா சன்சாரா கூறியதாவது: நேற்று சகோதரியுடன் பேசினோம். ஆனால், ராணுவ கடமை மிக்க அதிகாரி என்பதால், இன்று காலை வெளியான செய்தி குறித்து ஒரு வார்த்தை கூட அவர் கூறவில்லை. அவர் பற்றிய செய்தி வெளியானதும், எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த நிலையில் அவரை பார்ப்பது பெருமையாக இருக்கிறது. நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. அவர் டிஆர்டிஓ வில் இணைந்து விஞ்ஞானியாகி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்ற வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவருக்கு பல வாய்ப்புகள் வந்தன. ஆனாலும், இந்தியாவிலேயே தங்கியிருந்து ராணுவத்தில் சேர விரும்பினார். முதல் முயற்சியிலேயே அவர் ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்தில் சேர வேண்டும் என்பது எனது கனவு. ஆனால், என்னால் அது முடியவில்லை. அதற்காக வருத்தப்பட்டாலும், எனது சகோதரியை ராணுவ சீருடையில் பார்க்கும் போது, அவர் மூலம் எனது கனவு நிறைவேறியதாக உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதும் வதோதராவில் குடிபெயர்ந்தோம். எங்களது குடும்ப மதிப்புகளாக தேசப்பற்றும், ராணுவ ஒழுக்கமும் இருந்தது. எங்களது பெற்றோர் எங்களுக்கு வாய்ப்புகள் தந்தாலும், எங்களது வாழ்க்கை ராணுவத்தில் தான் இருந்தது என்றார்.

comment / reply_from

related_post