dark_mode
Image
  • Saturday, 10 May 2025

அமைச்சர் பதவி போனால் என்ன?.. பொன்முடி இப்போ என்ன பண்றார் பாருங்க.. தொகுதியில் திடீர் முகாம்!

அமைச்சர் பதவி போனால் என்ன?.. பொன்முடி இப்போ என்ன பண்றார் பாருங்க.. தொகுதியில் திடீர் முகாம்!

பொன்முடியின் சர்ச்சை பேச்சு காரணமாக அவரது அமைச்சர் பதவி பறிபோன நிலையில், தற்போது தனது திருக்கோவிலூர் தொகுதி சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அமைச்சராக இருந்த பொன்முடியின் கடந்த கால பேச்சுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தன. அதன் உச்சமாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த தபெதிக கூட்டத்தில் பேசிய பொன்முடி, பெண்கள் குறித்தும் சைவம், வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். இதற்கு திமுகவில் இருந்து கனிமொழியே கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

பொன்முடியின் பேச்சால் கோபமடைந்த திமுக தலைமை அவரது துணை பொதுச் செயலாளர் பதவியை உடனே பறித்தது. ஆனாலும் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என பொன்முடிக்கு எதிராக அதிமுக, பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். அழுத்தம் அதிகரிக்கவே திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் பொன்முடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அமைச்சர், திமுக துணை பொதுச் செயலாளர் என இரண்டு மிக முக்கிய பதவிகள் பொன்முடியிடம் இருந்து திடீரென பறிக்கப்பட்டு டம்மியாக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் முதலில் சில நாட்கள் கட்சி, பொது நிகழ்வுகளில் பொன்முடி கலந்துகொள்ளவில்லை. எனினும், தற்போது ஒரு சட்டமன்ற உறுப்பினராக தனது திருக்கோவிலூர் தொகுதி சார்ந்த நிகழ்வுகளில் பொன்முடி கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கடந்த 1ஆம் தேதி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பொன்முடி வழங்கினார். அதே நாளில் விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்க கொடியை ஏற்றி வைத்து மே தின வாழ்த்து தெரிவித்தார். மே 2ஆம் தேதி திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அதே சமயம் நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொன்முடி கலந்துகொள்ளவில்லை. அவர் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இல்லை என்பதால் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் மாவட்டச் செயலாளர் என்கிற அடிப்படையில் பொன்.கவுதமசிகாமணி கூட்டத்தில் கலந்துகொண்டார்.

comment / reply_from

related_post