இன்று முதல் ஆக.,24 வரை தமிழகத்தில் மழை

சென்னை : 'தமிழகம், புதுச் சேரியில் இன்று முதல், 24ம் தேதி வரை மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று தெற்கு ஒடிஷா, வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடக்கக் கூடும்.
மத்திய கிழக்கு - தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும், ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 24ம் தேதி வரை மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.