சென்னை Ford ஆலை.. பரபரன்னு வேலை நடக்குது.. புது பொலிவு பெறும் மறைமலைநகர் பேக்டரி..!

சென்னை மறைமலைநகரில் இருக்கும் உற்பத்தி ஆலையை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஃபோர்டு கார் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு சென்னை மறைமலைநகரில் தன்னுடைய உற்பத்தி ஆலையை செயல்படுத்தி வந்தது. இந்த ஃபோர்டு ஆலை சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஆனால் காலபோக்கில் பல்வேறு போட்டிகள் காரணமாகவும், விற்பனை மந்தமடைந்த காரணத்தாலும் ஃபோர்டு நிறுவன கார்களின் உற்பத்தி குறைக்க வழிவகுக்கப்பட்டு இந்தியாவில் இருந்த இரண்டு தொழிற்சாலையில் ஒன்று விற்கப்பட்டது, மற்றொன்று சென்னையில் மூடப்பட்டு உள்ளது.
போர்டு நிறுவனம் தொடர்ந்து நஷ்டமடைய தொடங்கிய நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை மறைமலைநகர் தொழிற்சாலை திடீரென மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சென்னை மறைமலைநகரில் இருக்கும் கார் உற்பத்தி ஆலையை மீண்டும் தொடங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபோர்டு நிறுவனம் மறைமலை நகரில் இருக்கும் கார் உற்பத்தி ஆலையை மீண்டும் செயல்படுத்த விரும்புவதாக அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தது. தங்களுடைய ஏற்றுமதிக்கான கார்களை உற்பத்தி செய்ய இந்த ஆலையை பயன்படுத்துவோம் என குறிப்பிட்டிருந்தது.
ஆனால் அந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருந்தது. அதற்கு அடுத்த கட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே ஃபோர்டு நிறுவனம் மறைமலைநகர் ஆலையை புதுப்பிக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டது என தகவல்கள் பரவின. இந்த நிலையில் ஃபோர்டு நிறுவனம் மறைமலைநகர் ஆலைக்கு புத்துயிர் அளிப்பதற்கான பணிகளை கையில் எடுத்திருப்பதாக பிசினஸ் லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் வரிகள் சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டால் பழையபடி இந்த கார் உற்பத்தி ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக அளவில் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக ஃபோர்டு செயல்பட்டு வந்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.
இந்த நிறுவனம் குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு இடங்களில் ஆலைகளை நடத்தி கார்களை உற்பத்தி செய்தது . ஆனால் 2022 ஆம் ஆண்டு குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு இடங்களிலும் செயல்பட்டு வந்த ஆலைகளை மூடி இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டது. ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் ஆலையை டாட்டா குழுமம் அப்போது கைப்பற்றியது. சென்னை ஆலை அப்படியே மூடப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்
BY.PTS NEWS M.KARTHIK