டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களின் வங்கிக்கணக்கில் பணம்.. தமிழக அரசு அனுப்பியது..!

டெல்லியில் சமீபத்தில் தமிழர்கள் வாழ்ந்த பகுதி இடிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களின் வங்கிக் கணக்கிற்கு தமிழக அரசு நிவாரண நிதி அனுப்பி உள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் அறிவிப்பின்படி, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டன. இதனால், சுமார் 300 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், அதில் வாழ்ந்த 370 தமிழ் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததாக கூறப்பட்டது.
இந்த நேரத்தில், அந்த தமிழர்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் தலா 8000 ரூபாய் வழங்கவும், 4000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், 360 தமிழ்க் குடும்பங்களின் வங்கிக்கணக்கில் ₹8,000 செலுத்தப்பட்டதாகவும், ₹4,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் ஆவடி நாசர் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.