மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் : தமிழக அரசு அதிரடி

அரசுப் பணிகள் சிறப்பாக நடைபெறவும், நிர்வாக வசதிக்காகவும் செயலாளர்கள், ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய ராஜேந்திர ரத்னு சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் முதன்மைச் செயலாளர், சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குனராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ச.விஜயகுமார், நில சீர்திருத்த ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையராக இருந்த வள்ளலார், சமூக சீர்திருத்தத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித் துறை (செலவினம்) செயலாளராக இருந்த நாகராஜன் வணிக வரித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குனராக இருந்த பொ.சங்கர், உயர்கல்வித் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி, மனிதவள மேலாண்மை துறை செயலாளர் பதவிக்கு சென்றுள்ளார். மனிதவள மேலாண்மை துறை பொறுப்பு வகித்த பிரகாஷ், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். சிஎம்டிஏ பொறுப்பு வகித்த பிரபாகர், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.