சல்லி சல்லியாக நொறுக்கிய ராமதாஸ்..பாமகவில் தன்னை தவிர எல்லோரையும் நீக்கிட்டாரு! மொத்தம் இத்தனை பேரா?

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே தொடர் மோதல் வெடித்து வருகிறது. இதுவரை 150-க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகளும் 15-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்க நிர்வாகிகளும் மாற்றப்பட்டு இருக்கின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த இடைவெளியே இருக்கும் நிலையில் பாமகவின் மோதலால் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், சிலரை தவிர பாமவில் பெரும்பாலோர் ராமதாஸால் நீக்கப்பட்டுள்ளனர்.
எளிய பின்னணியில் இருந்து வந்து மிகப்பெரிய அரசியல் தலைவராகி இருப்பவர் ராமதாஸ். மருத்துவராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். அதற்கு பிறகு வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றப்பட்ட போதிலும், இதுவரை எந்த அரசு பதவியையும் ஏற்காதவர்.
அதே நேரத்தில் பல்வேறு சமூகங்களில் இருந்து எம்பி, எம்எல்ஏக்கள், மத்திய அமைச்சர்களை உருவாக்கியவர். இந்த நிலையில் கட்சியின் எதிர்காலம் கருதி தனது மகனான அன்புமணி ராமதாசை அரசியலுக்கு அழைத்து வந்தார்.
இளம் வயதிலேயே மத்திய அமைச்சராகவும் ஆக்கினார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் மோதல் நிலவியது. தந்தை மகன் இடையேயான மோதல் கட்சி நிர்வாகிகளை தூக்கி அடிப்பது வரை வந்து நின்றது. மற்ற கட்சிகள் தேர்தல் வேலைகளை துவங்கி விட்டு நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியோ உட்கட்சி பூசலில் சிக்கி தவித்ததால் அதிருப்தி அடைந்தனர் நிர்வாகிகள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். அதிலிருந்து தந்தை மகன் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களான திலகபாமா உள்ளிட்டோரை நீக்குவதாக அறிவித்ததோடு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களையும் நீக்குவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதுவரை 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உச்சகட்டமாக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவரான பாலுவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜிகே மணி, அருள் எம்எல்ஏ உள்ளிட்ட சிலரை தவிர குறிப்பாக தன்னைத் தவிர பெரும்பாலானோரை ராமதாஸ் மாற்றி இருக்கிறார். பொது செயலாளர், பொருளாளர், மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர், வன்னியர் சங்கத்தில் 15க்கும் மேற்பட்டோர் மாற்றப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் பாமகவில், மாநில பொதுச் செயலாளர், மாநில பொருளாளர், மாநில துணைத்தலைவர், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை மாநில தலைவர், தேர்தல் பணி செயலாளர், தேர்தல் பணி தலைவர், மாநில இளைஞர் சங்க செயலாளர், மாணவர் சங்கச் செயலாளர், பாட்டாளி சமூக ஊடக பேரவை தலைவர், 78 மாவட்ட செயலாளர்கள், 63 மாவட்ட தலைவர்கள், ஒரு மாவட்ட பொருளாளர் இதுவரை மாற்றப்பட்டுள்ளனர்.
வன்னியர் சங்கத்தில் இரண்டு மாநில துணைத்தலைவர்கள், 9 மாவட்ட செயலாளர்கள், ஆறு மாவட்ட தலைவர்கள், ஒரு மாவட்ட பொருளாளர் தற்போது வரை ராமதாஸால் நீக்கப்பட்டு இருக்கின்றனர். தைலாபுரத்துக்கு வராதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என வெளிப்படையாகவே மிரட்டலும் விடுத்திருக்கிறார். போகிற போக்கில் தன்னைத் தவிர அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினாலும் நீக்குவார் என விமர்சிக்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
செய்தியாளர் மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி