dark_mode
Image
  • Thursday, 26 June 2025

வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் மூடல்; முதல்வர் அறிவித்த 3.0 திட்டம் கிடையாது நமது நிருபர்

வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் மூடல்; முதல்வர் அறிவித்த 3.0 திட்டம் கிடையாது நமது நிருபர்

கிராமங்களில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம், வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

தமிழக சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் கீழ், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு, புதிய தொழில் துவங்குவதற்காக, நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதை குறைக்க, கிராமங்களில் தொழில்முனைவோரை உருவாக்கவும் ஊக்குவிக்கவும், இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதில், மாநில அளவில் 64 பேர்; மாவட்ட அளவில் 230; வட்டார அளவில் 355; ஊராட்சி அளவில் 3,994 என, 4,623 பேர் பணியாற்றி வருகின்றனர். உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

அதனால், 'வாழ்ந்து காட்டுவோம் 3.0 விரைவில் செயல்படுத்தப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அதற்கான எவ்வித செயல் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, வரும் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, சிறப்பு செயலாக்கத் துறை செயலர் ஸ்ரேயா பி.சிங், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதன் வாயிலாக, இத்திட்டம் முடிவுக்கு வருவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இத்திட்டத்தில், 1.06 லட்சம் பேர் தொழில்முனைவோர்களாக்கப்பட்டு, வங்கி கடன் பெற்று தரப்பட்டுள்ளது. 5,000 உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 3.08 லட்சம் விவசாயிகள், உரம், விதை, இயந்திரங்களுக்கு மானியம் பெற்றுள்ளனர். அத்துடன், 1,000 தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 15,926 பேருக்கு, தையல், எல்.இ.டி., பல்பு தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக, இத்திட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.

 

related_post