dark_mode
Image
  • Thursday, 26 June 2025

Ramadoss பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுக காரணமா? அன்புமணியின் அப்பட்டமான பொய்! ராமதாஸ் பளீச்

Ramadoss பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுக காரணமா? அன்புமணியின் அப்பட்டமான பொய்! ராமதாஸ் பளீச்

சென்னை: பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் திமுகதான் காரணம் என அன்புமணி ராமதாஸ் கூறுவது அப்பட்டமான பொய் என பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

 

பாமக எம்எல்ஏக்கள் அருள், ஜி.கே. மணி ஆகியோருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை வந்திருந்தார்.

 

அப்போது அவர் மருத்துவமனையில் இரு எம்எல்ஏக்களையும் சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுக காரணம் என அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எம்எல்ஏக்களை சந்தித்தேன். அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்றார்.

 

அன்புமணி

 

அப்போது அன்புமணி மேடையில் கேட்ட மன்னிப்பை நேரில் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு போக போக தெரியும் என பாடலை பாடி அந்த பிரஸ் மீட்டை ராமதாஸ் கலகலப்பாக்கினார். மேலும் அன்புமணி மாவட்டங்கள் தோறும் கூட்டம் நடத்துகிறாரே என்ற கேள்விக்கு அவர் வேலையை அவர் பார்க்கிறார் என்றார்.

 

பொதுக் குழு

 

வேலூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பாமக பொதுக் குழுவில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், குட்கா, புகையிலை உள்ளிட்டவை குறித்து நான் பேசாமல் இருக்க எனக்கு பல கோடி ரூபாய் தர முன் வந்தனர். இது போன்ற பல லாபிகளை பார்த்துள்ளேன்.

 

லாபி

 

அத்தனை லாபிகளையும் தன்னந்தனியாக எதிர்த்தவன் இந்த அன்புமணி ராமதாஸ். நான் குட்கா, புகையிலை குறித்து பேசுவதை தடுத்து என் வாயை அடைக்க யார் யார் மூலமாகவோ வந்து பேரம் பேசினர். "உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம். நீங்கள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தால் போதும்" என்றார்கள்.

 

குட்கா லாபி

 

குட்கா குறித்து நான் பேசாமல் இருக்க ரூ 1000 கோடி தருவதாக அன்று சொன்னார்கள். புகையிலை லாபிக்கு ரூ 5000 கோடி தருவதாக சொன்னார்கள். எங்கு எப்படி வேண்டும் என சொல்லுமாறு கேட்டார்கள். நான் நினைத்திருந்தால் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு எப்படியோ இருந்திருப்பேன்.

 

கட்சிதான் முக்கியம்

 

ஆனால் எனக்கு பணம் முக்கியமில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் முக்கியம். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன் முக்கியம். நான் மன உறுதியோடு இருந்தேன். பணம் வேண்டுமானால் எப்படியும் சம்பாதிக்கலாம். நமது கட்சியின் நற்பெயர்தான் முக்கியம். இன்னும் 8 மாதங்களில் இந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

 

பாமகவை பலவீனப்படுத்த

 

பாமகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். திமுக, பாமகவுக்கு துரோகம் செய்தது. பாமகவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறது. பாமகவில் நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் நானோ அல்லது ஐயாவோ (ராமதாஸோ) காரணில்லை.

 

திமுகதான் காரணம்

 

திமுகதான் காரணம். சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு நமக்காக கூடிய கூட்டத்தை பார்த்து திமுக அதிர்ச்சி அடைந்துவிட்டது. நாம் வலிமையாக இருப்பது திமுகவுக்கு பிடிக்கவில்லை, அதனால் பாமகவில் யாரையோ தூண்டி விட்டு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

 

திமுக மீது அன்புமணி விமர்சனம்

 

ராமதாஸின் மகள் காந்திமதியின் கணவர் பரசுராமனுக்கு, அதாவது முகுந்தனின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாமக, திமுகவுடன் கூட்டணிக்கு செல்லும் என பேசி வரும் நிலையில் அன்புமணியோ திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

 

கீழடியை தடுப்பதா?

 

ஆனால் மருத்துவர் ராமதாஸோ, பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுக காரணம் இல்லை என தெரிவித்துள்ளார். அது போல் கீழடி விவகாரத்தில் ஆய்வறிக்கைகளை மத்திய அரசு வெளியிடாத நிலையில் "கீழடியை தடுப்போர் வரலாற்றில் புதையுண்டு போவர்" என ராமதாஸ், பாஜகவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்தியாளர் மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

related_post