மண்டைக்காடு கோவில் ஊர்வலத்தில் யானைக்கு அனுமதி இல்லை – குதிரை வண்டியில் சந்தனக்கூடம் பவனி

நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சந்தனக்கூடம் பவனி, இந்த ஆண்டு யானை இல்லாமல் நடைபெற்றது. வனத்துறையிடமிருந்து யானைகளின் உரிமம் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத காரணத்தால், யானை பவனிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் குதிரை வண்டியில் சந்தனக்கூடத்தை அழைத்து வந்து வழிபாடு செய்தனர்.
பொதுவாக, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோவில்களில் இருந்து யானைகள் மீது சந்தனம், களபம் பவனியாக கொண்டு வரப்படும். ஆனால், இந்த ஆண்டு யானை பவனிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கொத்தனார் விளை முத்து சிவன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள், குதிரை வண்டியில் சந்தனக்கூடத்தை அழைத்து வந்தனர்.
இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக யானை பவனிக்கு அனுமதி இல்லை. அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்” என தெரிவித்தனர்.
செய்தியாளர். மு. கார்த்திக், புதிய தலைமைச்செய்தி