FIFA WORLD CUP 2022 முதல் போட்டியில் கத்தாரை வீழ்த்தி ஈகுவடார் அபார வெற்றி.! வரலாற்று படுதோல்வி அடைந்த கத்தார்

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் இன்று தொடங்கியது. கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அல் பைட் ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது கால்பந்து உலக கோப்பை தொடர்.
முதல் போட்டியில், இந்த உலக கோப்பையை நடத்தும் கத்தாரும் ஈகுவடாரும் மோதின. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் கத்தார் கோல்கீப்பர் சாத் அல் ஷபந்தை தடுக்க முயற்சிக்க கையை நீட்ட, அவரது கை மறித்து ஈகுவடார் வீரர் வாலென்சியா கீழே விழுந்தார். இதையடுத்து ஷீப்-க்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டு, வாலென்சியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கோல் அடித்தார் வாலென்சியா. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார் வாலென்சியா.
மீண்டும் ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் 2வது கோல் அடித்தார் வாலென்சியா. 2-0 என ஈகுவடார் முன்னிலை வகித்த நிலையில், முதல் பாதி ஆட்டம் முடிந்தது. கத்தார் அணி கோல் அடிக்கும் வாய்ப்பை கூட முதல் பாதியில் உருவாக்கவில்லை. அந்தளவிற்கு மோசமாக ஆடியது.
ஆட்டத்தின் 2ம் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. எனவே 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி ஈகுவடார் அணி அபார வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த உலக கோப்பையை தொடங்கியது. ஃபிஃபா உலக கோப்பையை நடத்தும் நாட்டின் அணி தான் முதல் போட்டியில் ஆடும். அப்படி உலக கோப்பையை நடத்திய எந்த அணியும் முதல் போட்டியில் தோற்றதில்லை. முதல் முறையாக ஃபிஃபா உலக கோப்பையை நடத்தும் கத்தார் அணி முதல் போட்டியில் தோற்று வரலாற்று படுதோல்வியை பதிவுசெய்துள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description