சென்னையில் செயின் பறிப்பு வழக்கு: என்கவுண்டரில் உயிரிழந்த ஜாபரின் உடல் உறவினர்களுக்கு ஒப்படைப்பு

சென்னையில் அண்மையில் நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய ஜாபர் குலாம் ஹுசைன், போலீசாரின் என்கவுண்டரில் உயிரிழந்தார். அவரது உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜாபர் குலாம் ஹுசைன், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர், பல்வேறு மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.
சென்னையில் அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் ஆறு செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு, விமான நிலையத்தில் ஜாபர் மற்றும் அவரது கூட்டாளி சூரஜை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜாபரை, திருடப்பட்ட நகைகளை மீட்க அழைத்துச் செல்லும் போது, அவர் தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும், போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்காப்பிற்காக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஜாபர் உயிரிழந்தார்.