dark_mode
Image
  • Friday, 13 June 2025

தவெகவில் ஐக்கியமான விஐபிகள்..விஜயுடன் கைகோர்த்த அருண்ராஜ்! அதிமுக, திமுக மாஜி எம்எல்ஏக்களும் தாவல்

தவெகவில் ஐக்கியமான விஐபிகள்..விஜயுடன் கைகோர்த்த அருண்ராஜ்! அதிமுக, திமுக மாஜி எம்எல்ஏக்களும் தாவல்

சென்னை: பீகார் வருமான வரித் துறையில் பணியாற்றி வந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று அவர் பனையூரில் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளதாகவும், அவருக்கு கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். இதேபோல அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜலட்சுமி, ஸ்ரீதர், திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன் உள்ளிட்ட சிலரும் இணைந்துள்ளனர்.

 

2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, திமுக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் தானும் அக்கட்சிகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது விஜய்யின் எண்ணம்.

 

இதற்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை வளைத்து போடவும் திட்டமிட்டு வருகிறார். மேலும் சர்க்கார் படத்தில் வந்தது போல தமிழகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற எண்ணமும் விஜய்க்கு இருக்கிறது.

 

அந்த வகையில் தான் பிரபல பேச்சாளரான ராஜ்மோகன், விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு சென்று பின் அக்கட்சியில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியம் ஆகினர். ஏற்கனவே கட்சியில் ஜான் ஆரோக்கியசாமி ஆலோசகராக இருக்கும் நிலையில் அருண்ராஜும் ரகசியமாக ஆலோசனையாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஐஆர்எஸ் அதிகாரியான அவர் இந்திய வருமான வரித்துறையில் பணியாற்றியவர். தமிழகத்தில் பணியாற்றிய அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாருக்கு தூக்கி அடிக்கப்பட்டார்.

 

அடிப்படையில் மருத்துவரான இவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரி ஆனார். 2009 ஆம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரியாக சென்னையில் பணியாற்றினார். தொடர்ந்து பீகாருக்கு தூக்கி அடிக்கப்பட்டார். பாட்னாவில் வருவாய்த்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என திட்டமிட்டு இருந்தார். ஆனால் நேரடியாக அல்லாமல் ஜான் ஆரோக்கியசாமி, மூலம் விஜய்க்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் அருண்ராஜ். இதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பிய நிலையில் அந்த ராஜினாமா மத்திய அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைய இருப்பதாகவும் இணை பொது செயலாளர், துணை பொது செயலாளர் ஆகிய பதவிகள் வழங்கப்படலாம் என கூறப்பட்டது

 

தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அவருக்கு கொள்கை பரப்பு பொதுச் செயலளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான ராஜலட்சுமியும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். கடந்த 2024 மார்ச் மாதம் அதிமுகவில் இருந்து ஒரு சில முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்களின் ஒருவர் தான் இந்த ராஜலட்சுமி. வழக்கறிஞரான இவர் 2011 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கேள்வி தங்கபாலுவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மறைந்த பிறகு தனக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என விலகி பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்.

 

அதுமட்டுமல்லாமல் வால்பாறை சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வன், ஜேபிஆர் ரமிபாய் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் விஜய் முன்னிலையில் கட்சியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்

 

செய்தியாளர் மு .கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

related_post