dark_mode
Image
  • Friday, 27 June 2025

தேர்தல் கமிஷனுக்கு பழனிசாமி கடிதம்

தேர்தல் கமிஷனுக்கு பழனிசாமி கடிதம்

சென்னை : 'உட்கட்சி விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தலையிட முடியாது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, புகார் கொடுத்தவர்கள் அனைவரிடமும் விசாரித்து முடிவெடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சூர்யகுமார், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, புகழேந்தி உள்ளிட்டோர் விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியது.

அனைவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில், தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க., உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர், கட்சி உறுப்பினர் இல்லை, கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் சார்பில், வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் கூறுவதை ஏற்கக்கூடாது.

கட்சி விதிகளில் திருத்தம் செய்து, 2022 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் மட்டுமே தேர்தல் கமிஷன் தலையிட முடியும். உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது.

அதற்கு சட்டத்தில் இடம் இல்லை. எனவே, கட்சியில் உறுப்பினராக கூட இல்லாத நபர் தொடர்ந்துள்ள வழக்கை நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

தேர்தல் கமிஷனுக்கு பழனிசாமி கடிதம்

related_post